எஸ் பேங்கிங் மோசமான இந்த நிலைக்கு காரணம் என்ன.? வெளியான பல திடுக்கிடும் உண்மைகள்.!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான எஸ் பேங்க் மோசமான நிதிநிலை காரணமாக இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது. இதனால் எஸ் பேங்கில் பணம் சேமித்து வைத்திருந்தவர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளானார்கள். இந்நிலையில் எஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூரை சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 20 போலியான நிறுவனங்களை நடத்தி, அதன்மூலம் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடனை திருப்பி தர தகுதி இல்லாத நிறுவனங்கள் என மற்ற வங்கிகளால் கைவிடப்பட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு எஸ் பேங்க் லோன் கொடுத்துள்ளது. அதன்மூலம் சுமார் 10,206 கோடிக்குமேல் வராக்கடன் அதிகரித்துள்ளது.
லோன் கொடுத்ததற்கு பிரதிபலனாக அந்த நிறுவனங்கள் ராணா கபூரின் மனைவியின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தியுள்ளன. குறிப்பாக டிஎச்எப்எல் நிறுவனத்திடம் இருந்து ரூ.600 கோடி பணம் கைமாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு எஸ் பேங்கிங் நிறுவனர் ரானா கபூர் லண்டனில் முதலீடு செய்துள்ளதும், அரசியல் தலைவர்களிடம் இருந்து நட்பை வளர்க்க, அவர்களிடம் இருந்து சுமார் 44 விலை உயர்ந்த ஓவியங்களை பலகோடிகளுக்கு வாங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது.
ராணா கபூரின் மனைவி பிந்து, மகள்கள் ராகி கபூர் டான்டன், ரோஷினி கபூர், ராதா கபூர் ஆகியோருக்கும் இந்த சட்டவிரோத பரிவர்த்தனையில் பங்கு இருக்கலாம் என அமலாக்கப்பிரிவினர் சந்தேகப்படுகின்றனர்.
இந்நிலையில் எஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூரை வரும் 11ம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவினர் அனுமதி வாங்கியுள்ளனர்.