மனைவி, மகளை கொலை செய்த 90 வயது ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி.. பரபரப்பு வாக்குமூலத்தால் பேரதிர்ச்சி.!

மனைவி, மகளை கொலை செய்த 90 வயது ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி.. பரபரப்பு வாக்குமூலத்தால் பேரதிர்ச்சி.!



Maharashtra Mumbai East Andheri Sher E Punjab Colony Ex Army Man Killed Wife and Daughter

மனநலம் பாதிக்கப்பட்ட இளையமகள் மற்றும் மனைவியை கொலை செய்த 90 வயது ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, கிழக்கு அந்தேரி ஷேர்-இ-பஞ்சாப் காலனி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் புருஷோத்தம் சிங் (வயது 90). இவரின் மனைவி ஜஸ்பின் கவூர் (வயது 81). இந்த தம்பதிகளுக்கு குர்பிந்தர் கவூர் (வயது 58), கமல்ஜித் கவூர் (வயது 55) என 2 மகள்கள் உள்ளனர். இதில், கமல்ஜித் கவூர் மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். 

இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற புருஷோத்தம் சிங்கின் மனைவி ஜஸ்பின் கவூர், கடந்த 10 வருடமாக திடீரென உடல்நலம் குன்றி படுத்த படுக்கையாகியுள்ளார். மேலும், இரண்டாவது மகளும் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இருவரையும் புருஷோத்தம் சிங் குழந்தை போல கவனித்து வந்துள்ளார். குர்பிந்தர் கவூர் இதே அடுக்குமாடி குடியிருப்பில் தனது கணவர், குழந்தையுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக மனைவி மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட மகளை கொலை செய்யும் விபரீத எண்ணம் புருஷோத்தம் சிங்குக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, படுக்கையில் கிடந்த மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த புருசோத்தம் சிங், தனது மகளின் கழுத்தில் கத்தியை இறக்கி அவரையும் கொலை செய்துள்ளார். அதிகாலை நேரத்தில் தனது மனைவி, மகளை கொலை செய்த புருசோத்தம் சிங் வீட்டிலேயே இருந்துள்ளார்.

maharashtra

தாயையும், தங்கையையும் பார்த்து வரலாம் என குர்பிந்தர் கவூர் திடீரென காலை 8.30 மணியளவில் தந்தையின் வீட்டிற்கு சென்ற நிலையில், தந்தை அவரை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்துள்ளார். மேலும், கதவை திறக்காமல் பிரச்சனை செய்த நிலையில், ஒரு சமயத்தில் காவல் துறையினரை வரவழைத்தால் மட்டுமே கதவை திறப்பேன் என்று கூறியுள்ளார். என்ன நடந்தது என்று தெரியாமல் குர்பிந்தர் கவூரும் மேக்வாடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தது பரபரப்பு கொலை சம்பவம் தெரியவந்துள்ளது. மேலும், எனக்கு வயதாகிவிட்டது, நான் ஒருவேளை இறந்துவிட்டால் மனைவி மற்றும் மகளை யார் கவனித்துக்கொள்வார்கள் என்ற வருத்தத்தில் இருவரையும் கொலை செய்துவிட்டதாக புருஷோத்தம் சிங் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கொலையானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல் துறையினர், புருஷோத்தம் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.