65 வயது மூதாட்டி கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.. கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்.!

65 வயது மூதாட்டி கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.. கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்.!



Karnataka Ramanagara Channapatna 65 Aged Woman Murder by Panipuri Business Man

தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் மூதாட்டியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து, நகையை கொள்ளையடித்து சென்ற பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. இறுதியில் கொலையாளி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் உள்ள ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா, தோபிணகெரே கிராமத்தை சார்ந்த மூதாட்டி ஜெயம்மா (வயது 65). இவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டின் பின்பகுதியில் நின்றுகொண்டு இருக்கையில், அவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஜெயம்மாவை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். தாயை காப்பாற்ற முயன்ற ஜெயம்மாவின் மகன் சித்தராஜாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. 

ஜெயம்மா இறந்ததும் அவரின் நகைகளை மர்ம நபர் கொள்ளையடித்து சென்ற நிலையில், படுகாயம் அடைந்த சித்தராஜாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அட்டூர் காவல் துறையினர், கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், ஜெயம்மாவை கொலை செய்தது பக்கத்து வீட்டில் வசித்து வந்த பானிபூரி வியாபாரி ரவி என்பது தெரியவந்தது.  

karnataka

ரவியை கைது செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், "கடந்த 2012 ஆம் வருடம் பெங்களூரில் உள்ள துரித உணவகத்தில் பணியாற்றி வந்த ரவிக்கும் - கடைக்கு வந்த வாடிக்கையாளருக்கும் இடையே நடந்த தகராறில், ஆத்திரமடைந்த ரவி வாடிக்கையாளரை கொலை செய்து ஹெப்பால் பகுதியில் உள்ள ஏரியில் வீசி சென்றார். இவ்வழக்கு தொடர்பாக ரவியை கைது செய்த பெங்களூர் காவல் துறையினர் சிறையில் அடைக்கவே, ஜாமினில் வெளியே வந்த ரவி தோபினகெரே கிராமத்தில் பானிபூரி வியாபாரம் செய்ய தொடங்கியுள்ளார். 

அவரின் வியாபாரத்திலும் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் பணப்பிரச்சனை ஏற்பட, பெங்களூர் கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வரும் வழக்கறிஞருக்கு பணம் கொடுக்க முடியாமல் தவித்துள்ளார். அப்போது, ஜெயம்மாவின் கழுத்தில் உள்ள நகைகள் ரவியின் கண்களில் புலப்பட, அவரை கொலை செய்து நகையை கொள்ளையடித்து பணத்தை சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்திற்கு ரவி வந்துள்ளார். இதனால் ஜெயம்மா கொலை செய்யப்பட்டுள்ளார். அதனை தடுக்க வந்த ஜெயம்மாவின் மகனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. 

கைதான ரவி விசாரணைக்கு பின்னர் அட்டூர் காவல் துறையினரால் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.