புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்டியதால் வெடித்தது கலவரம்! : தீக்கிரையானது அமைச்சர் வீடு..!

புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்டியதால் வெடித்தது கலவரம்! : தீக்கிரையானது அமைச்சர் வீடு..!


andhra-minister-and-mlas-homes-torched-over-renaming-of

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்டியதால் வெடித்த கலவரத்தில் அமைச்சர் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் ஏற்கனவே உள்ள 13 மாவட்டங்கள் தற்போது 28 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில் புதிதாக உருவாக்கப்பட்ட கோனசீமா மாவட்டத்திற்கு பி.ஆர்.அம்பேத்கார் கோனசீமா என பெயரிடலாம் என அரசு பரிசீலித்து வந்தது.இதற்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

ஆந்திர மாநிலத்தில் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு கோனசீமா மாவட்டத்தின் பெயரை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் கோனசீமா மாவட்டம் என மாற்றி அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

கோனசீமா பரிக்ரசஷன் சமிதி, கோனசீமா சாதனா சமிதி போன்ற அமைப்புகள் தீவிர போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் அமலாபுரத்தில் உள்ள மாநில போக்குவரத்து மந்திரி விஸ்வரூப் வீட்டின் முன் நேற்று ஏராளமானோர் திரண்டு கல்வீசி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது திடீரென மந்திரியின் வீடு தீப்பற்றி எரிந்தது. இதற்கு அங்கிருந்த காஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் போராட்டக்காரர்கள் தான் தீ வைத்ததாக ஆளுங்கட்சி சார்பில் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காணப்பட்டது.

மேலும், ஒரு கல்லூரி பேருந்து மற்றும் ஒரு அரசு பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து வன்முறை நடந்த பகுதி முழுவதும் பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.