நரபலி கொடுக்கப்பட்ட 4 வயது சிறுவன்.... காவல்துறை விசாரணையில் அம்பலமான உண்மை.!
உத்திர பிரதேசம் மாநிலத்தில் நான்கு வயது குழந்தை நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை செய்த காவல்துறை மந்திரவாதி உட்பட நான்கு பேரை கைது செய்து இருக்கிறது.
உத்திரபிரதேசம் மாநிலத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள ரெஹ்சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திரா. இவருக்கு திருமணம் ஆகி நான்கு வயதில் ஒரு மகன் இருந்தான். முதல் மனைவி உயிரிழந்ததை தொடர்ந்து ரேணுகா பிரஜாபதி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் ஜிதேந்திரா.

திருமணமான சிறிது நாட்களிலேயே ரேணுகாவிற்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது . மேலும் அவரது குழந்தை ஒன்று கருவிலேயே மரணம் அடைந்திருக்கிறது. இதனால் குழப்பத்தில் இருந்த ரேணுகா தயாராம் யாதவ் என்ற மந்திரவாதியை சந்தித்து அருள்வாக்கு கேட்டிருக்கிறார். அப்போது அவர் ஜிதேந்திராவின் 4 வயது மகனான சத்யேந்திராவை பனி கொடுத்தால்தான் குழந்தை கிடைக்கும் என கூறியுள்ளார்.
இதற்கு சம்மதித்த ரேணுகா தனது தாய் மற்றும் தந்தையின் உதவியுடன் சத்யேந்திராவை கடத்தி கொலை செய்திருக்கிறார் . பின்னர் அவரது உடலை அங்குள்ள குளம் ஒன்றில் வீசி சென்றுள்ளனர். தனது மகனை காணவில்லை என்று ஜிதேந்திரா அளித்த புகாரின் பேரில் காவல்துறை நடத்திய விசாரணையில் இந்த உண்மை சம்பவம் வெளியாகி இருக்கிறது . இது தொடர்பாக ரேணுகா.மந்திரவாதி மற்றும் ரேணுகாவின் பெற்றோர் ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது.