மகளின் காதலை ஏற்க முடியாத தந்தை..கோழி வெட்டும் கத்தியால் மகளை வெட்டிய கொடூர சம்பவம்..!
கர்நாடக மாநிலம் தேவனஹல்லி பிடலூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவர் கோழி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இளைய மகளின் காதல் விவகாரம் மஞ்சுநாத்க்கு தெரிய வந்த நிலையில் தன் மகளை கண்டித்து இருக்கிறார். தனது தந்தையின் கண்டிப்பை ஏற்க மறுத்த இளைய மகள் காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இதனையடுத்து மஞ்சுநாத் காவல் நிலையத்துக்கு சென்று தன் மகளை தன்னுடன் வந்து விடுமாறு கெஞ்சியுள்ளார். ஆனால் அவரோ தன் காதலனோடு போவதாக போலீசாரிடம் கூறியுள்ளார். எனவே அந்த ஜோடியை காவல் துறையினர் ஆறுதல் மையத்துக்கு அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து மஞ்சுநாத்தின் மூத்த மகளும் ஒருவரை காதலிப்பதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனால் தந்தைக்கும் மகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மஞ்சுநாத் கோபமுற்று கோழி வெட்டும் அரிவாளை எடுத்து மகளை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து மஞ்சுநாத் காவல் நிலையத்துக்கு சென்று தன் மகளை வெட்டி கொன்றதை ஒப்புக்கொண்டு சரணடைந்தார். இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் மஞ்சுநாத்தின் மூத்த மகளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மஞ்சுநாத் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.