பாலாஜி முருகதாஸின் வா வரலாம் வா திரைப்படம் எப்படி உள்ளது?: விமர்சனம் இதோ.!



actor-balaji-murugadoss-starring-va-varalam-va-movie-re

 

எஸ்.பி.ஆரின் எஸ்ஜிஎஸ் கிரியேட்டிவ் மீடியா தயாரிப்பில், தேனிசைத்தென்றல் தேவா இசையில், இயக்குனர் எல்.ஜி ரவிச்சந்தர், எஸ்.பி.ஆர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வா வரலாம் வா. இப்படத்தில் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ், மஹானா சஞ்சீவி, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி, காயத்ரி ரெமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சிங்கம்புலி, சரவண சுப்பையா, கிரேன் மனோகர், தீபா சங்கர், வையாபுரி உட்பட பலரும் நடித்துள்ளனர். வா வரலாம் வா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி, மக்களின் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

தனது சிறுவயதில் செய்த குற்றத்தினால், பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பாலாஜி முருகதாஸும் - ரெடின் கிங்ஸ்லியும் தங்களின் உழைப்பில் வாழ வேண்டும் என முயற்சிக்கிறார்கள். அவர்களின் முயற்சி தோல்வியை சந்தித்ததால், மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடுகிறார்கள். 

கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் என பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டு முக்கிய புள்ளியாக இருக்கும் கோபியிடம் வேலைக்கு சேரும் பாலாஜி மற்றும் ரெடின், வால்வோ பேருந்தை கடத்த திட்டமிட்டு, பேருந்தில் இருந்த 40 குழந்தைகள் மற்றும் மலேஷியாவில் இருந்து வந்த நாயகிகள் மஹானா மற்றும் காயத்ரி ஆகியோரையும் தவறுதலாக கடத்தி செல்கிறார்கள்.

cinema news

இவர்களை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கும் நபர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக, குழந்தைகள் ஆதரவற்றவர்கள் என்ற விபரம் தெரியவருகிறது. இது வில்லன்களின் பார்வையை மஹானா மற்றும் காயத்ரியின் மீது திருப்புகிறது. எதிர்பாராத விதமாக பாலாஜி மற்றும் ரெடின் நாயகிகள் இருவரையும் காதலிக்க தொடங்கிவிடுகிறார்கள். மைம் கோபியோ மஹானா & காயத்ரியை கடத்தி பணம் சம்பாதிக்க எண்ணுகிறார். இவர்களின் காதல் வெற்றிபெற்றதா? கோபி கடத்தல் தொழிலில் பணம் சம்பாதித்தாரா? என்பதே கதை.

வா வரலாம் வா திரைப்படத்தின் மூலமாக திரையில் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் பாலாஜி முருகதாஸ், தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக மஹானா சிறப்பாகவே நடித்துள்ளார். வில்லன் மைம் கோபி, தனக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறார். 

ரெடின் நாயகனுடன் படம் முழுவதும் பக்கபலமாக வலம்வருகிறார்கள். அவரின் காமெடிகள் திரை ரசிகர்களை சிரித்து மகிழவைக்கிறது. சிங்கம்புலி, தீபா ஆகியோர் காமெடி கூட்டணியும் சிறப்பாக அமைந்துள்ளது. பிற நடிகர்கள் திரைக்கதையின் நகர்வுக்கு உதவி செய்துள்ளார்கள். தேனிசைத்தென்றல் தேவா, காதுக்கு இனிமையான பாடல்களை வழங்கி இருக்கிறார். கார்த்திக் ராஜாவின் ஒளிப்பதிவும் சிறப்பாக உள்ளது. 

அதிரடி திருப்பம், சண்டை காட்சிகள், காமெடி கொண்டாட்டம் என படத்தை இயக்குனர்கள் எல்.ஜி ரவிச்சந்தர் மற்றும் எஸ்.பி.ஆர் திறம்பட கையாண்டு, ஒவ்வொருவரும் வரவேற்கக்கூடிய படத்தை நமக்காக வழங்கியுள்ளனர்.