மத்திய கலால் வரி குறைப்பு; குறைந்தது பெட்ரோல்-டீசல் விலை,.. வாகன ஓட்டிகள் நிம்மதி..!

மத்திய கலால் வரி குறைப்பு; குறைந்தது பெட்ரோல்-டீசல் விலை,.. வாகன ஓட்டிகள் நிம்மதி..!



petrol-diesel-price-reviced-due-to-excise-duty-reductio

மத்திய அரசின் கலால் வரி குறைப்பு  தொடர்ந்து சென்னையில் பெட்ரோல் டீசல் விலை குறைந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை 45 நாட்களுக்கு பிறகு மீண்டும் குறைந்துள்ளது.

சில காலமாகவே நாட்டில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் மிகவும் கடுமையாக உயர்ந்து கொண்டே வந்தது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. சாதாரண மக்கள் இந்த விலை உயர்வால் கடும் அவதிக்குள்ளாயினர். 

இந்த நிலையில் மத்திய அரசு நேற்று அதிரடியாக பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை கணிசமாக குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிக்கையில் பெட்ரோலுக்கான மத்திய கலால் வரி லிட்டருக்கு ரூ 8-ம் டீசல் மீதான மத்திய கலால் வரி ரூ.6ம் குறைக்கப்படுகிறது.

இதனால் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ 9.5 அளவுக்கும் டீசல் விலையில் ரூ 7 அளவுக்கும் குறையும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ 1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். அனைத்து மாநில அரசுகளும், குறிப்பாக 2021 நவம்பரில் இத்தகைய வரி குறைப்பு அறிவிக்கப்பட்டபோது தங்களின் பங்காக வரி குறைப்பு செய்யாத மாநிலங்கள் இதேபோன்று வரி குறைப்பை அமலாக்கி சாமானிய மக்களுக்கு நிவாரணம் அளிக்க நான் வலியுறுத்துகின்றேன். 

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு (12 சிலிண்டர்கள் வரை) சிலிண்டர் ஒன்றுக்கு ரூ 200 மானியமாக இந்த ஆண்டும் நாங்கள் வழங்குவோம். இது நமது தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் உதவி செய்யும். இதனால் ரூ 6,100 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கணிசமாக குறைந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 8.22 குறைந்து ரூ102.63 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ 6.70 குறைந்து ரூ 94.24 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 45 நாட்களில் பெட்ரோல் டீசல் விலையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 8.49 குறைந்து  96.16 புதுச்சேரியில் ஒரு லிட்டர் டீசல் ரூ 6.69 குறைக்கப்பட்டு ரூ 86.33 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.