சிறையில் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகும் சிறுமிகள்... அதிர்ச்சி தகவல்...!!

சிறையில் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகும் சிறுமிகள்... அதிர்ச்சி தகவல்...!!



girls-being-sexually-assaulted-in-iran-prisonshocking-i

ஈரான் சிறையில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை, மின்சார அதிர்ச்சி போன்ற கடுமையான சித்ரவதைகள் நடந்துள்ளன என்று மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈரான் நாட்டின் தெஹ்ரான் நகரில் கடந்த 2022 -ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 13 - ஆம் தேதி ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண்ணை ஈரான் அறநெறி காவல்துறையினர் கைது செய்தனர்.

காவல்துறையினர் மாஷா அமினியை தாக்கியதில் அவர் கோமா நிலைக்கு சென்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாஷா செப்டம்பர் 16 - ஆம் தேதி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு எதிராக மாத கணக்கில் போராட்டம் செய்தனர்.

இந்த போராட்டத்தின் வெற்றியாக இஸ்லாமிய மத சட்டங்கள் சரியாக பின்பற்றப்படுவதையும், பொதுவெளியில் பெண்கள் ஹிஜாப் அணிவதை உறுதிபடுத்தும் அறநெறி போலீஸ் பிரிவை ஈரான் கலைத்துள்ளது. 

அதே சமயம், ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியதில் இதுவரை 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், போராட்டத்தில் கைது செய்தவர்களில் சிலருக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றி இருக்கிறது.

போராட்டக்காரர்களில் பலர் இன்னும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போராட்டங்களில் ஈடுபட்ட 22 ஆயிரம் பேர் சிறையில் உள்ளனர். அவர்களில் சிறுவர், சிறுமிகளிடம் இருந்து உண்மைகளை வரவழைப்பதாக கூறி கொடூர சித்ரவதைகள் நடந்து வருகின்றன என ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் என்ற மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் ராணுவத்தினரிடம் சிக்கி சிறையில் உள்ள 12 வயது சிறார்கள் முதற்கொண்டு இந்த கொடுமைகள் நடந்து வருகின்றன. அவர்கள் மீது ஈரான் உளவு அமைப்பு மற்றும் பாதுகாப்பு வீரர்கள் கொடூரமாக அடிப்பது, மின்சார அதிர்ச்சி கொடுப்பது, பாலியல் வன்கொடுமை செய்வது போன்ற பிற பாலியல் வன்முறைகள்  நடத்தப்படுகின்றன. 

ஈரானின் புரட்சிகர படைகளும், பசிஜ் என்ற துணை ராணுவ படையினரும் கூட இந்த சித்ரவதை செயல்களை செய்துள்ளனர் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது. இரண்டு வழக்கறிஞர்கள் மற்றும் 17 வயதுடையவர்கள் என நேரடி சாட்சியாக இருக்கும் 19 பேரிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. 

பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் இருந்தும் சித்ரவதை பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்று அந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது என சி.என்.என். கூறியுள்ளது. சமீபத்தில் ஈரானில் இருக்கும் 31 மாகாணங்களில் 25 மாகாணங்களில் ஐயாயிரம் மாணவ மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டு பாதிப்பு ஏற்படுத்திய சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

ஈரானின் தலைவர் அயோத்துல்லா அலி காமினேனி, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதனை மன்னிக்க முடியாத குற்றம் என்று கூறியுள்ளார். இரக்கமின்றி விசாரணை நடத்துங்கள் என்றும் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.