திருட வந்த இடத்தில் வசமாக சிக்கிய வாலிபர்: கரண்ட் கம்பத்தில் கட்டிவைத்து வெளுத்த இளைஞர்கள்..!

திருட வந்த இடத்தில் வசமாக சிக்கிய வாலிபர்: கரண்ட் கம்பத்தில் கட்டிவைத்து வெளுத்த இளைஞர்கள்..!



youth who were trapped in the place where they had come to steal were tied to a current pole

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகேயுள்ள வடகரை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஈவராஜன் (35). கட்டிட தொழிலாளியான இவர், சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் வடகரையில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஈவராஜன், விடுமுறையில் சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் வாலிபர் ஒருவர், ஈவராஜனின் வீட்டிற்குள் புகுந்தார். இதனை கண்ட ஈவராஜனின் உறவினர் சம்பத் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர், ஈவராஜன் மற்றும் தனது நண்பர்களுக்கு செல்ஃபோன் மூலம் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து ஈவராஜனின் வீட்டின் முன்பு திரண்ட கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள், மொட்டை மாடியில் பதுங்கி இருந்த வாலிபரை பிடித்தனர்.

இதன் பின்னர் அந்த வாலிபரை இழுத்து வந்து மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த பெண்ணாடம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து மின் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த வாலிபரை மீட்டனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர், பெண்ணாடம் சோழநகரை சேர்ந்த சூரியமூர்த்தி (27) என்பதும், ஈவராஜன் வீட்டில் திருட முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.