கிராமத்தின் வளர்ச்சிக்காக 3 வருடத்திற்கு ஆடல் பாடல் வேண்டாம் என முடிவெடுத்த இளைஞர்கள்!

கிராமத்தின் வளர்ச்சிக்காக 3 வருடத்திற்கு ஆடல் பாடல் வேண்டாம் என முடிவெடுத்த இளைஞர்கள்!



Youngsters avoid dance program for their village

கஜா புயலுக்கு பிறகு டெல்டா மாவட்ட இளைஞர்கள் பல நலத்திட்டங்களை செய்துவருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் மணல் திருட்டை தவிர்க்கவேண்டும் என்றும், நீர்நிலைகளை பலப்படுத்தவேண்டும் என்றும் கிராம மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தனர். இதற்காக போராட்டங்களை நடத்தினார்கள் ஆனாலும் எதுவும் நடக்கவில்லை.

 இதனால் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பல நல்ல விஷயங்களை செய்துவருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் களத்தூர் இளைஞர்கள், அவர்களது கையிலிருந்து ரூ. 59 லட்சத்தை செலவு செய்து நீர்நிலைகளை சீரமைத்தார்கள், வரத்து வாய்க்கால்களை வெட்டி சீர்செய்தார்கள். அதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுவாசல் கிராமத்தில் 30 வருடங்களுக்கு முன்பு இருந்து காணாமல் போன பாசன வாய்க்காலை கண்டுபிடித்து 5 கி.மீ வெட்டி சீர்செய்தார்கள். அந்த இளைஞர்களின் செயல் சேந்தன்குடி, கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு என்று பல கிராமங்களில் உள்ள இளைஞர்களை ஈர்த்தது. சொந்த செலவில் குளம், எரி, வாய்க்கால் என்று சீரமைப்பு பணிகளில் தீவிரமாக உள்ளனர்.

இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் நாடியம் கிராமத்தின் வளர்ச்சியை மேம்படுத்த இளைஞர்கள் முடிவு செய்தார்கள். இது தொடர்பாக அந்த ஊரில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் அனைவரும் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினார்கள். 

youngsters

அவர்களது கிராமத்தின் வளர்ச்சிக்காக அந்த ஊரில் உள்ள 340 ஏக்கர் மற்றும் 100 ஏக்கர் பரப்பளவுள்ள 2 ஏரிகளையும், 7 குட்டைகளையும் மீட்டு தூர்வாரி தண்ணீரை நிரப்ப வேண்டும் என முடிவு செய்தனர். 

மேலும் அவர்கள் ஊரில் உள்ள உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக உயர்த்துவதற்கும், அதற்கு தேவையான கட்டமைப்பு பணிகளை செய்வதற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை 3 ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டும் எனவும் முடிவு செய்தனர்.

அதனால் அவர்களது ஊரில் 10 நாட்கள் நடக்கும் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் நடக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு அதற்காண தொகையை நீர்நிலை, பள்ளி, கிராம வளர்ச்சிக்காக செலவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். 

இதனையடுத்து பலரையும் சீரழிக்கும் டாஸ்மாக் மதுக்கடைய அவர்களது ஊர் எல்லைக்குள் எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க கூடாது என்று முடிவு செய்து கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தனர்.

 இந்த இளைஞர்களின் எழுட்சி தமிழகம் முழுவதும் பரவி நீர்நிலை சேமிப்பு என்ற புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.