புதுக்கோட்டையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர இளைஞன்!

தமிழகத்தில் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், சமீப காலமாக சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படும் கொடிய சம்பவமும் நடந்து வருகிறது. சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஏம்பலில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சிறுமியின் வீட்டருகே வசிக்கும் சாமிவேல் என்ற ராஜாவை போலீசார் கடந்த 1-ஆம் தேதி கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் இது போன்ற குற்ற சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே வசித்து வந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் வேந்தன்பட்டி பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவர் தான் குற்றவாளி என்பது தெரியவந்தது. ஆனால் அரவிந்த் என்பவர் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக வேந்தன்பட்டியை சேர்ந்த அரவிந்தை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.