தீராத சர்க்கரை வியாதி.. குழந்தையுடன் தாய் எடுத்த அதிர்ச்சி முடிவு!
மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்தவர் முத்து கார்த்திக். இவர் அதே பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், முத்து பூபதி என்ற பெண்ணுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு தற்போது இரண்டு வயதில் முத்து மீனா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது.

இதில் முத்து பூபதிக்கு 15 வயதில் இருந்தே சர்க்கரை நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக தொடர்ச்சியான சிகிச்சை எடுத்து வந்தும் பலனில்லை என கூறப்படுகிறது. மேலும் குழந்தை பிறந்த பின்னர் நாளுக்கு நாள் சர்க்கரை நோயின் அளவு அதிகரித்ததால் அவரால் அன்றாட வாழ்வில் கவனம் செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை கணவர் முத்து கார்த்திக் பால் வினியோகம் செய்வதற்காக சென்ற நிலையில், வீட்டில் இருந்த முத்து பூபதி ஆன்லைன் மூலமாக வாங்கி வைத்திருந்த கெமிக்கல் பாட்டிலை தனது உடலில் தேய்த்துக் கொண்டு குழந்தையுடன் சேர்ந்து தீ வைத்துக் கொண்டார்.

இதனையடுத்து தீ உடல் முழுவதும் பரவிய நிலையில் அலறி துடித்த முத்து பூபதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டதால் குழந்தையும், தாயும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.