அரசு மருத்துவமனையில் மருத்துவராக நடித்து குழந்தைக்கு பேரம் பேசிய பெண்; விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்.!

அரசு மருத்துவமனையில் மருத்துவராக நடித்து குழந்தைக்கு பேரம் பேசிய பெண்; விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்.!



Viluppuram Govt Hospital  

 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ஜனகராஜ் நகர் பகுதியைச் சார்ந்த பொன்னுச்சாமி என்பவர் தனது மனைவி ஹேமலதாவை (வயது 25) கடந்த 20-ம் தேதி பிரசவத்திற்காக அனுமதி செய்துள்ளார்.

ஹேமலதாவுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், உடல்நலம் கருதி குழந்தை இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை பெண்ணின் அறைக்குள் அத்துமீறி நுழைந்த ஒருவர், தன்னை மருத்துவர் என்று அறிமுகம் செய்து குழந்தைக்கு ஆடை உடுத்தி வருகிறேன் என வாங்கிக் கொண்டு சென்றுள்ளார். 

வெகுநேரமாகியும் குழந்தை காணாததால் பதறிப்போன ஹேமலதா, தனது மகனை தேடி மருத்துவமனை வளாகத்தில் சுற்றி அழுது புலம்பியுள்ளார். அதே சமயத்தில் பக்கத்துவார்டில் அதே பெண்மணி மற்றொரு குழந்தையை கையில் தூக்கி வைத்து நிற்கவே, அவரிடம் தனது குழந்தை எங்கே? என கேட்டுள்ளார். 

அப்போது உனது குழந்தை அழகாக இருக்கிறது. எனக்கு இந்த குழந்தை வேண்டும். உனது குழந்தைக்காக ரூ.5 லட்சம் பணம் தருகிறேன். உன் கணவரிடம் கேட்டு சொல் என்று கூறியுள்ளார். இதனை கேட்டு பதறிப்போன ஹேமலதா குழந்தையை வாங்க முற்பட்டபோது, அவரை தள்ளிவிட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். மேலும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரிடம் விசாரித்த போது, அந்தப் பெண்மணி செஞ்சி மேல்மலையனூர் பகுதியைச் சார்ந்த ஏழுமலை என்பவரின் மனைவி கோடீஸ்வரி (வயது 22) என்பது தெரியவந்துள்ளது. 

இவர் மருத்துவமனையில் பணியாற்றி வரும் நபரின் உறவினர் என்பதும் உறுதியாகியுள்ளது. விசாரணையின் போது மருத்துவர்கள் கோடீஸ்வரி மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அவரை அவசர அவசரமாக அழைத்துச் செல்ல முற்பட்டனர். இதை அடுத்து காவல்துறையினர் சுதாரித்து கோடீஸ்வரியை அனுப்ப மறுத்து, விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை வைத்தனர். தற்போது விசாரணை நடந்து வருகிறது.