செஞ்சி: குளத்தை தூர்வாருவதற்காக 350 ஆண்டுகால மண்டபத்தை இடித்த சோகம் - வரலாற்று ஆர்வலர்கள் வேதனை.!

செஞ்சி: குளத்தை தூர்வாருவதற்காக 350 ஆண்டுகால மண்டபத்தை இடித்த சோகம் - வரலாற்று ஆர்வலர்கள் வேதனை.!



viluppuram-gingee-ancient-building-demolished

 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி வரலாற்று தொடர்புகளை கொண்ட நகரம் ஆகும். இந்நகரில் உலகளவில் கவனிக்கப்படும் செஞ்சிக்கோட்டை, வரலாற்றில் தொடர்புடைய கோவில்கள் என பல்வேறு விஷயங்கள் நிறைந்து இருக்கின்றன. செஞ்சியில் உள்ள செஞ்சிக்கோட்டை அருகே அமைந்துள்ள குளத்தை தூர்வாருவதற்கு, 300 - 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று பொக்கிஷம் அழிக்கப்பட்டு இருக்கிறது. 

அதாவது, கடந்த 1600-வாக்கில் செஞ்சிக்கோட்டை மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியால் கைப்பற்றப்பட்டு, 24 ஆண்டுகளை கடந்து ஆட்சி நடந்து வந்தது. அப்போது, அம்மன்னரின் ஆட்சிக்காலத்தில் வழிப்போக்கர் மண்டபம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. 

இந்த வழிப்போக்கர் மண்டபம் தற்போது பயன்பாட்டில் இல்லாமல் இருந்தாலும், வரலாறு தெரிந்தவர்கள் அவ்வப்போது அங்கு சென்று கட்டிட அமைப்புகளை பலருக்கும் விளக்க காரணமாக இருந்தது. இந்நிலையில், குளம் தூர்வாரும் பணிக்காக வழிப்போக்கர் மண்டபம் இடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செஞ்சி வரலாறு தொடர்பான காணொளிகளை பதிவு செய்யும் செஞ்சி பசங்க பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. 

அந்த வீடியோவில், "நீர்த்தார் வழிபாடு மண்டபம் அல்லது வழிப்போக்கர் மண்டபம், அடித்தளம் கருங்கல், மேல்தளம் செங்கல் கட்டுமானம் கொண்டுள்ளது. மராத்தியர் காலத்தில் இது கட்டப்பட்டு இருக்கலாம். மராத்தியர்கள் கட்டுப்பாட்டில் செஞ்சி இருந்தபோது, வழிப்போக்கர் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. 

பெரிய அளவிலான குளத்திற்கு அருகே, வழிப்போக்கர்கள் தங்குவதற்கு ஏற்ப அன்று கட்டப்பட்டு இருந்தது அல்லது இறந்தோருக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் மண்டபம் என்றும் கூறப்படுகிறது. 

நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட மண்டபங்கள் கருங்கல் கொண்டு இருக்கும். ஆனால், மராத்தியர் காலத்தில் செங்கல் கொண்டு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறான 300 ஆண்டுகள் தாங்கிநிற்கும் செங்கல் மண்டபத்தை நம்மால் இனி கட்ட முடியாது. 

இவ்வாறான வரலாற்று சின்னங்களை பாதுகாக்காமல் விட்டாலும், அழிக்காமல் இருப்பதே வரலாறுகளை எதிர்கால சந்திக்கு உணர்த்த இயலும். குளத்திற்கு அருகே மட்டுமே வழிப்போக்கர் மண்டபங்கள் என்பது இருக்கும். இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஆனால், இறுதியில் இன்று மண்டபம் அழிக்கப்பட்டு, குளம் தூர்வாரப்படுகிறது" என்று வேதனைப்பட வரலாற்று ஆர்வலர் தேவமுருகன் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.