உயிரையே விட்டுடுவேன்..!! பரபரப்பான தேர்தல் நேரத்தில் கண்ணீருடன் வைரலான விஜயபாஸ்கரின் போஸ்டர்.!! அமைச்சர் கொடுத்த விளக்கம்.!

உயிரையே விட்டுடுவேன்..!! பரபரப்பான தேர்தல் நேரத்தில் கண்ணீருடன் வைரலான விஜயபாஸ்கரின் போஸ்டர்.!! அமைச்சர் கொடுத்த விளக்கம்.!



vijayabaskar-talk-about-viral-poster

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் விராலிமலை தொகுதியில் போட்டியிடுகிறார் சுகாதாரத்துறை அமைச்சர்விஜயபாஸ்கர். இவர் மூன்றாவது முறையாக இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல் தி.மு.க. வேட்பாளராக இதே தொகுதியில் இரண்டு முறை வெற்றி வாய்ப்பை இழந்த தென்னலூர் பழனியப்பனும் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

இரண்டு வேட்பாளர்களுமே விராலிமலை தொகுதியில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். வேட்பாளர்கள் மட்டுமின்றி வேட்பாளர்களின் குடும்பத்தினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் களமிறங்கி உள்ளனர். இதனால் விராலிமலை சட்டமன்றத் தொகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

இந்தநிலையில், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் உயிரை விட்டுவிடுவேன் என்று பொருள்படும் வகையில், விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கர் கண்ணீருடன் காட்சியளிப்பது போன்ற போஸ்டர் இணையத்தில் நேற்று வைரலானது. இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு விளக்கப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 



அதில், இது முழுக்க முழுக்க  தவறான செய்தி! என் தொகுதி மக்களுக்கு நான் ஆற்றியிருக்கும் நற்பணிகள் மீதும் என் மக்களின் மீதும் நான் வைத்திருக்கும் நம்பிக்கை இமயம்போல உயர்ந்தது, உறுதியானது. இப்படிப்பட்ட கோழைத்தனமான வார்த்தைகளை எனக்கு சிந்திக்கக்கூடத் தெரியாது..நான் நேர்மறை எண்ணங்களால் நிரப்பப்பட்டவன். எனது முகநூல் (Dr.C.Vijayabaskar), டிவிட்டர் (vijayabaskarofl) இன்ஸ்டாகிராம் (vijayabaskarofl) பக்கங்களில் என் கைப்பட நான் பதிவிடும் செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மட்டுமே முற்றிலும் உண்மையானவை! மற்ற குழுப்பதிவுகளிலோ பிற பக்கங்களிலோ என்னைப்பற்றி வரும் செய்திகளுக்கு நான் பொறுப்பல்ல. இந்த போஸ்டர் செய்தி முற்றிலும் பொய்யானது, எனக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் சித்தரிக்கப்படுபவை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்! இவ்வாறு அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.