உயிரைப்பறித்த இரண்டாவது திருமணம்.. வரதட்சணை கேட்டு கொடுமை.!

உயிரைப்பறித்த இரண்டாவது திருமணம்.. வரதட்சணை கேட்டு கொடுமை.!


Vellore Gudiyatham Woman Killed by Second Husband

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுகத்தூர், ஓங்கபாடி கிராமத்தில் வசித்து வருபவர் கன்னியப்பன். இவரின் மகன் ரவி (வயது 33). ரவிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவி பிரிந்து சென்றுவிட்டார். ஆம்பூர், மேல்சானங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரின் மகள் சத்யா (வயது 26). இவர் திருமணம் ஆகி, கணவரை பிரிந்து தாயின் வீட்டில் வசித்து வருகிறார். 

இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்து, கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், திருமணம் நடைபெற்று முடிந்த 6 மாதத்திற்கு பின்னர், சத்யா தனது சகோதரர் ஸ்ரீதருக்கு தொடர்பு கொண்டு ரூ.50 ஆயிரம் கணவரின் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக தெரிவித்துள்ளார். 

இதனால் சத்யாவின் குடும்பத்தினர் ரவியின் வீட்டிற்கு சென்று சமாதானம் செய்த நிலையில், நேற்று மீண்டும் பெற்றோர்களுக்கு தொடர்பு கொண்ட சத்யா, தன்னை வீட்டிற்கு அழைத்து செல்ல வற்புறுத்தி இருக்கிறார். அப்போது, குறுக்கிட்ட ரவி நானே 2 நாட்களில் உனது தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்று கூறியுள்ளார். 

vellore

இந்த நிலையில், இன்று ஸ்ரீதருக்கு தொடர்பு கொண்ட ரவி, உனது அக்கா இறந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன சத்யாவின் குடும்பத்தினர், ரவியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது சத்யா அறையில் இறந்து கிடந்துள்ளார். ரவியின் வீட்டார் சத்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறும் நிலையில், மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சத்யாவின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

மேலும், 50 க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு வேப்பங்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். காவல் துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து அனைவரையும் அனுப்பி வைத்தனர். சத்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ரவி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.