15 வயது சிறுமி இரயில் முன்பாய்ந்து தற்கொலை.. குடியாத்தத்தில் நடந்த சோகம்: கண்ணீரில் பெற்றோர்.!

15 வயது சிறுமி இரயில் முன்பாய்ந்து தற்கொலை.. குடியாத்தத்தில் நடந்த சோகம்: கண்ணீரில் பெற்றோர்.!



Vellore Gudiyatham Minor Girl Suicide 

 

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், கார்திகேயபுரம் பகுதியில் வசித்து வருபவர் பாஸ்கர். இவரின் 15 வயது மகள் பிரித்திங்கா (வயது 15). அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல பள்ளிக்கு சென்ற சிறுமி, மதியம் 1 மணியளவில் தான் வீட்டிற்கு செல்வதாக சக மாணவியரிடம் கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். 

மாலை நேரத்தில் நீண்ட நேரம் ஆகியும் மகள் வீட்டிற்கு வராததால் அதிர்ந்துபோன பெற்றோர், பள்ளிக்கு சென்று பார்த்தபோது மேற்கூறிய தகவல் தெரியவந்துள்ளது. இதனால் அவரை உறவினர்களுடன் சேர்ந்து பல இடங்களில் தேடியுள்ளனர். 

பின், இதுகுறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்திருந்த நிலையில், சிறுமியின் புத்தகப்பை, செருப்பு குருநாதபுரம் இரயில்வே தண்டவாளம் அருகே இருந்துள்ளது. இதனையடுத்து, சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

குடியாத்தம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிறுமியின் சடலம் குடியாத்தம் - மேல்பட்டி இரயில் நிலையத்திற்கு இடையே, பள்ளி சீருடையில் இரயிலில் அடிபட்டு இறந்தவாறு மீட்கப்பட்டது. 

தகவல் அறிந்த ஜோலார்பேட்டை இரயில்வே காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை செய்துகொண்டாரா? கொலை செய்து உடல் வீசப்பட்டதா? என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.