தமிழக வெற்றி கழக பிரமுகரின் வீட்டிற்கு பூட்டுப்போட்ட மக்கள்; காரணம் என்ன?.. கோடிக்கணக்கில் ஏலசீட்டு மோசடி.!



Tiruvannamalai Arani Vijay Makkal Iyakkam Administrator Cheating Peoples 

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, பள்ளிகூடத்தெருவில் வசித்து வருபவர் விஜய் முருகன் (40), விஜய் ரசிகர்மன்ற ஆரணி நகரத்தலைவராக இருந்து வந்தார். தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை விஜய் ஆரம்பித்தபின், ஆரணி தொகுதியின் தலைவராகவும் அறிவிக்கப்பட்டார். இதனை பயன்படுத்தி அவர் அப்பகுதியை சேர்ந்த பெண்கள், வியாபாரிகள் ஆகியோரிடம் வாரச்சீட்டு, தினசீட்டு ஆகியவற்றை நடத்தி கோடிக்கணக்கில் வருமானம் பார்த்துள்ளார். 

வீட்டிற்கு பூட்டு போட்ட மக்கள்:

இதனிடையே, சீட்டு முடிந்த நபர்களுக்கு பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், எமதமடைந்த மக்கள் விஜய் முருகனின் வீட்டு முன்பு குவிந்து தகராறு செய்தனர். மேலும், வீட்டின் கதவையும் வெளியே இருந்து தாழிட்டனர். இதனால் தன்னை எதற்காக வீட்டின் உள்ளே வைத்து பூட்டினீர்கள்? என வீட்டினுள்  இருந்து விஜய் முருகன் கூச்சலிட்டு இருக்கிறார். தகவல் அறிந்து வந்த ஆரணி காவல் துறையினர், பூட்டை அகற்றி விஜய் முருகன் மற்றும் அவரின் குடும்பத்தினரை மீட்டனர். 

காவல்துறை விசாரணை & அறிவுறுத்தல்:

பின் நிகழ்விடத்தில் இருந்த மக்களிடம் விசாரித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில், "பல மாதங்களாக நாங்கள் பணம் செலுத்திய சீட்டு முடிந்துவிட்டது. எங்களுக்கான பணத்தை வைத்து விஜய் முருகன் சொத்து வாங்கியுள்ளார். கடந்த 2022 ம் ஆண்டே திருவண்ணாமலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். அதனாலேயே இம்முடிவை எடுத்தோம்" என கூறினர். 

கோடிக்கணக்கில் பணம் குறித்த தகவல் எழுவதால், காவல் துறையினர் பாதிக்கப்பட்ட மக்களிடம் வேலூர் சரக டிஐஜி அலுவலகத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.