அடுத்தவர் வீட்டை காண்பித்து; லீசுக்கு விடுவதாக கூறி... ரூ.36 லட்சம் ஏமாற்றிய பலே கில்லாடி...!
ஆன்லைனில் வீடு தேடுபவர்களை ஏமாற்றி, அடுத்தவர் வீட்டை வாடகைக்கு விடுவதாக கூறி 7 பேரிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்த பெண் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கொடுங்கையூர் அம்பிகா நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர், மனைவி, குழந்தை, மாமியார், மாமனார் ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், வேறு வீட்டிற்கு லீசுக்கு போக நினைத்த மணிகண்டன், ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்தார்.
விளம்பரத்தை பார்த்த கோபி மகாராஜா என்பவர், மணிகண்டனை தொடர்பு கொண்டு, எங்களிடம் வீடு உள்ளது எனக்கூறி, கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 132 வது தெருவுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
மணிகண்டன் அங்கு சென்று பார்த்தபோது, கோபி மகாராஜா மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோர் குடும்பத்துடன் வீட்டில் இருந்துள்ளனர். அவர்கள், முத்தமிழ் நகர் 3-வது தெரு காவேரி சாலை பகுதியில் தங்களுக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது என்றும், அதனை ரூ.5 லட்சத்திற்கு லீசுக்கு விட முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
வீட்டை பார்த்த மணிகண்டனுக்கு அந்த வீடு பிடித்ததால், முன் பணமாக ரூ.2 லட்சம் பேசி முடிக்கப்பட்டு, ரூ.1 லட்சம் படமாகவும், ரூ.1 லட்சம் காசோலையாகவும், கொடுத்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 23-ஆம் தேதி பணம் கொடுத்த நிலையில், அவர்கள் சொல்லிய தேதியில் வீடு ஒப்படைக்கப்படவில்லை.
இதனால் கடந்த டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி மணிகண்டன், கோபி மகாராஜா வீட்டிற்கு சென்று இதுகுறித்து கேட்டபோது, கத்தி மற்றும் துப்பாக்கியை காண்பித்து மணிகண்டனையும் அவர் உடன் சென்றவரையும் கோபிமகாராஜா மிரட்டி உள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த மணிகண்டன், இதுதொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான காவலர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கோபி மகாராஜா ஆன்லைனில் வீடு தேடுபவர்களை ஏமாற்றி பணம் பறித்துமோசடி செய்ததும், அவர் குறிப்பிட்ட முகவரியில் இருந்த வீடு அவருடைய வீடு இல்லை என்றும், அவர் வைத்திருந்தது டம்மி துப்பாக்கி என்பதும் தெரிந்தது.
கோபி மகாராஜா காண்பித்த வீடு கோவிலம்பாக்கம் நன்மங்கலம் பகுதியைச் சேர்ந்த குமார் (42) என்பவருக்கு சொந்தமானது என்றும் குமாரிடமிருந்து வீட்டை லீசுக்கு வாங்கி, அதனை பலரிடம் காண்பித்து ஏமாற்றி பணம் மொசடி செய்தது தெரவந்தது.
கோபி மகாராஜா உடன் இருந்த பெண் அவரது மனைவி இல்லை என்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, கொடுங்கையூர் குற்றப்பிரிவு காவலர் கோபி மகாராஜாவின் மனைவி எனக் கூறிய அம்பிகா (43), அவரது மகன் பிரவீன் ராஜ் (19) மற்றும் அந்த வீட்டை லீசுக்கு விட்ட குமார் (42) ஆகிய மூன்று பேரையும் நேற்று கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான கோபி மகாராஜாவை தேடி வருகின்றனர். அடுத்தவரின் வீட்டை காண்பித்து இதுவரை 7 பேரிடம் ரூ.36 லட்சம் வரை ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது.