வினாத்தாள் மாற்றம்: தேர்வு அறையில் மாணவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

வினாத்தாள் மாற்றம்: தேர்வு அறையில் மாணவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!



Question paper change: A shock awaits students in the examination hall

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 74 கலை கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடக்க இருந்த செமஸ்டர் பருவ தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 2வது செமஸ்டர் பருவ தேர்வு நடக்கிறது. இந்த நிலையில் பி.எஸ்.சி இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் பிரிவுகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆங்கிலம் புரொபஷனல் தேர்வு நேற்று பிற்பகல் 2 மணிக்கு நடக்க இருந்தது. இதற்காக கடலூரில் உள்ள பெரியார் அரசு கலை கல்லூரி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு தேர்வு எழுதுவதற்காக மாணவ-மாணவிகள் சென்றனர்.

தேர்வை முன்னிட்டு பிற்பகல் 2 மணிக்கு மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. அதனை வாங்கி படித்து பார்த்த மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வினாத்தாளில், 2 வது செமஸ்டர் பருவ தேர்வுக்கான ஒரு கேள்வி கூட அவற்றில் இடம் பெறவில்லை. முதல் செமஸ்டர் பருவ தேர்வில் இடம் பெற்றிருந்த வினாக்களே இருந்தது.

இதுபற்றி மாணவர்கள், தேர்வு அறைக்கு மேற்பார்வையிட வந்திருந்த பேராசிரியர்கள் மூலம் கல்லூரி முதல்வர்வரிடம் தெரிவித்தனர். பின்னர் முதல்வர் அண்ணாமலை பல்கலைக்கழக அதிகாரிகளை தொடர்பு கொண்டு வினாத்தாள் மாறியது குறித்து தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த அவர்கள்  2 வது செமஸ்டர் பருவ தேர்வுக்கான வினாத்தாளை இ-மெயில் மூலம் அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

அதனை பதிவிறக்கம் செய்து நகல் எடுத்த பிறகு தவறுதலாக கொடுக்கப்பட்ட வினாத்தாள்களுக்கு பதிலாக மாலை 4 மணிக்கு 2 வது செமஸ்டர் பருவ தேர்வுக்கான வினாத்தாள் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக பிற்பகல் 2 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வு மாலை 4 மணிக்கு தொடங்கியது. செமஸ்டர் தேர்வுக்கான வினாத்தாள் மாற்றி கொடுக்கப்பட்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.