டாஸ்மாக் கடைக்கு வாழை மரம், மாவிலைகட்டி சிறப்பாக நடந்த பூஜை..! புகைப்படம் வைரலானதை அடுத்து கடைக்கு சீல்...!
ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் மூடப்பட்ட மதுக்கடைகள் மூன்றாம்கட்ட ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் கடந்த திங்கள்கிழமை முதல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கடைகள் திறக்கப்பட்டு மதுவிற்பனை சூடுபிடித்துள்ளது.
தமிழகத்தில் நாளையில் இருந்து தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது. இதனை அடுத்து மதுப்பிரியர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பெரும்பாலான பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் மரத்தடுப்புகள் அமைக்கப்பட்டு, சமூக இடைவெளி கோடுகள் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீண்டும் மதுக்கடையை திறக்கும் மகிழ்ச்சியில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் உள்ள 1773 எண் மதுக்கடையில் வாழை மரம், மாவிலை தோரணம் கட்டப்பட்டு பூசைகள் செய்யப்பட்டது. இந்த தகவல் புகைப்படமாக சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து அந்தப்பகுதி வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் அவர்கள் அந்த கடைக்கு இன்று சீல் வைத்துள்ளார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்களில் வேறு இடங்களில் நடைபெறுகிறதா என ஆய்வு செய்யப்பட்டுவருகிறது.