சாலை விபத்தில் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட ஆசிரியை!.. போராடி மீட்ட காவலர்!.. குவியும் பாராட்டு..!



policeman fought to save a teacher who was thrown into the river in a road accident

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள மகிழஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவரது மனைவி உஷா. இவர் ஆணைக்குப்பம் கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், வழக்கம் போல் நேற்று உஷா தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

பணங்குடி பகுதியை கடந்த நிலையில், எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் உஷா வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் சாலையோரம் உள்ள ஆற்றில் தூக்கி வீசப்பட்டார்.ஆற்றில் விழுந்து தண்ணீரில் தத்தளித்தார்.

அப்போது அந்த வழியாக வந்த நன்னிலம் காவல் நிலைய காவலர் செல்வேந்திரன் ஆற்றில் குதித்து ஆசிரியை உஷாவை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டுவந்து சேர்த்தார். பின்னர் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதன் பின்னர் அவரை சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆற்றில் தூக்கி வீசப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிய ஆசிரியரை தனது உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய காவலர் செல்வேந்திரனுக்கு காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.