வெளிமாநில தொழிலாளர் தமிழகம் வருவதற்கு அனுமதி! புதிய விதிகளை வெளியிட்ட தமிழக அரசு!
வெளிமாநில தொழிலாளர் தமிழகம் வருவதற்கு அனுமதி! புதிய விதிகளை வெளியிட்ட தமிழக அரசு!
கொரோனா பரவல் தீவிரமாக இருந்துவந்ததால், தமிழகத்தில் பணியாற்றிய சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வடமாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்தநிலையில், தமிழகத்தில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு பல தொழிலாளர்கள் சென்ற நிலையில் அவர்கள் மறுபடியும் தமிழகம் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில்துறை நிறுவனங்களில் பெரும்பாலும் வெளிமாநில பணியார்களே பணியாற்றி வந்ததால் தற்போது தொழில்நிறுவனங்கள் பணியாளர்கள் இன்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன. இதனால் வெளிமாநில தொழிலாளர்களை தமிழகம் வர மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
வெளிமாநில தொழிலாளர்களை அழைத்துவர விரும்பும் நிறுவனங்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூலமாக இ-பாஸ் விண்ணப்பிக்க வேண்டும். அதில் தொழிலாளர்களின் பெயர், முகவரி, ஆதார் எண், செல்போன் எண், பணியாற்றும் இடம், வாகன எண், தனிமைப்படுத்துவதற்கான இடம் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் அழைத்துவரப்படும் வெளிமாநில தொழிலாளர்களின் போக்குவரத்து செலவை அந்தந்த நிறுவனங்கள் ஏற்க வேண்டும். தமிழகம் திரும்பும் வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் அந்தந்த நிறுவனங்களின் செலவில் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதில் தொற்று உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். தொற்று உறுதிசெய்யப்படவில்லை என்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.