காதலை ஏற்க மறுத்த பெற்றோர்.. விரக்தியில் கல்லூரி மாணவர் எடுத்த விபரீத செயல்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் வசித்து வருபவர் சகாய பார்த்திபன். இவருக்கு டேட் ரன் பார்த்திபன் என்ற மகன் ஒருவர் உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் டேட் ரன் பார்த்திபன் தன்னுடன் பயிலும் மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த காதல் விவகாரமானது டேட் ரன்னின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் எங்கே பெற்றோர் தனது காதலுக்கு சம்மதம் தெரிவிக்க மாட்டார்களோ என்ற மன உளைச்சலில் இருந்த டேட் ரன் பார்த்திபன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் டேட் ரன் பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.