எனது வேண்டுகோளை ஏற்று அறிவிப்பினை வெளியிட்ட மாண்புமிகு முதல்வருக்கு நன்றி.! ஓ.பன்னீர்செல்வம்

எனது வேண்டுகோளை ஏற்று அறிவிப்பினை வெளியிட்ட மாண்புமிகு முதல்வருக்கு நன்றி.! ஓ.பன்னீர்செல்வம்



ops thanks to mk stalin

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து தருமாறு தனது வேண்டுகோளை ஏற்று அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் பல குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்தநிலையில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் வைப்புத்தொகையாக வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், அவர்களின் பட்டப்படிப்பு வரையில் கல்வி - விடுதிச் செலவை அரசே ஏற்கும். பாதுகாவலர் அரவணைப்பில் இருந்தால் மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும். ஒரு குழந்தையையும் தமிழக அரசு கைவிடாது என மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்தநிலையில், தனது வேண்டுகோளை ஏற்று அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், "கொரோனா தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்து பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 28.5.2021 அன்று அறிக்கை வாயிலாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொண்டிருந்தேன். னது வேண்டுகோளை ஏற்று அதற்கான அறிவிப்பினை 29.5.2021 அன்று வெளியிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.