டெல்டா பாசனம்: மேட்டூர் அணையை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

டெல்டா பாசனம்: மேட்டூர் அணையை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!



open-water-from-mettur-dam-for-delta-irrigation

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு..ஸ்டாலின்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை முன்கூட்டியே மே 24 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, மேட்டூர் அணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். ஆர்ப்பரித்து வெளியே வந்த நீருக்குள் பூக்களை கூடையோடு கொட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். முதற்கட்டமாக தற்போது 3,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் 10,000 கன அடியாக அதிகரிக்கப்படும் என பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.

முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது காவிரி டெல்டா விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக விவசாயிகள் கூறுகையில், வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முன்கூட்டிய தூர்வாரும் பணி மற்றும் தண்ணீர் திறப்பு நிகழ்வுகள் நடைபெறுவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பருவ நிலை மாற்றம் காரணமாக முறையாக நடைபெற்ற குறுவை சாகுபடி அறுவடையின் போது மழையில் சிக்கி விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலை அண்மைக்காலங்களாக ஏற்பட்டு வருகிறது. தற்போது 15 தினங்களுக்கு முன்பே மேட்டூர் அணை திறப்பு குறுவை சாகுபடிக்கு, அதைத் தொடர்ந்து நடைபெறும் சம்பா, தாளடி சாகுபடிகளுக்கு உதவியாக இருக்கும்.

தூர் வாரும் பணிகள் 60 முதல் 70 சதவீதம் வரை நடைபெற்றுள்ளது. தூர்வாரும் பணிகளை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் எனவும், குறுவை சாகுபடிக்கு கடந்த வழங்கியது போன்று இந்தாண்டு சிறப்பு தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும்.

தரமான விதைகள், உரங்களை மானிய விலையில், உரிய நேரத்தில் விவசாயக் கடன் ஆகியவற்றை தடையின்றி வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.