அவரை விட்டு விலகமாட்டேன்.! காவலாளி மர்ம மரணம் - உடலை எடுக்கவிடாமல் சுற்றி வந்த நாயால் பரபரப்பு.!
திருநெல்வேலி மாவட்டம் வீரராகவபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 55). இவர் பாளையங்கோட்டையில் உள்ள பெருமாள்புரத்தில் தனியார் பஸ் நிறுவன அதிபர் சோமசுந்தரம் என்பவரின் வீட்டில் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். சோமசுந்தரத்தின் வீட்டில் கூடுதல் பாதுகாப்புக்காக வெளிநாட்டு நாய் ஒன்றும் வளர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது குடும்பத்துடன் சோமசுந்தரம் வெளியூர் சென்றுள்ளார். வீட்டில் பன்னீர் செல்வம் காவலுக்கு இருந்துள்ளார். இந்நிலையில் தலையில் இரத்த காயங்களுடன் பன்னீர் செல்வம் முன்பக்க கேட் அருகே நேற்று காலை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவரது பக்கத்தில் அந்த நாயும் இருந்துள்ளது. இதனால் நாய்தான் பன்னீர் செல்வதை கடித்து கொன்றுவிட்டதாக பொதுமக்கள் கூற, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பன்னீர் செல்வத்தின் உடலை மீட்க முயற்சித்துள்ளனர். ஆனால், அந்த நாய் யாரையும் அருகில் விடுவதாக இல்லை.

சுமார் 2 மணி நேரம் போராடியும் போலீசாரால் பன்னீர் செல்வத்தின் உடலை மீட்க முடியவில்லை. இதனால், நாய் கழுத்தில் சுருக்கு போட்டு நாயை தர தரவென இழுத்து சென்றதில் கழுத்தில் சுருக்கு இறுக்கி நாயும் இறந்துவிட்டது.
இதனை அடுத்து பன்னீர் செல்வத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். பன்னீர் செல்வம் நாய் கடித்து இறந்தாரா? கீழே விழுந்து இறந்தாரா என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் தெரியவரும்.
இந்நிலையில் பன்னீர் செல்வத்தின் அருகில் நாய் யாரையும் கிட்ட விடாததற்கு என்ன காரணம்? பன்னீர் செல்வம் மீது அவ்வளவு பாசமா? அல்லது நாய்தான் அவரை கடித்து கொன்றதா என மக்கள் குழப்பத்தில் உள்ளன்னர்.