செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டதாக கே என் நேரு பரபரப்பு பேட்டி..!!

செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டதாக கே என் நேரு பரபரப்பு பேட்டி..!!



K N Nehru sensational interview that Senthil Balaji was harassed..!!

அமைச்சர் செந்தில் பாலாஜியால் பேச முடியவில்லை, அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று கே.என்.நேரு கூறியுள்ளார்.

ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் அனுமதி பெற்று சந்தித்ததாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

மின்சார துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்ததீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

மேலும் அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் அமலாக்க துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நேற்று சோதனை நடத்தினர். சென்னை தலைமைச் செயலகத்தில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். கைது செய்து அழைத்து சென்ற போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். .

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர்கள் சந்தித்து வருகின்றனர். செந்தில் பாலாஜியை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, இவ்வாறு கூறினார்;-

செந்தில் பாலாஜி சுயநினைவு இன்றி உள்ளார். காது பக்கத்தில் வீக்கம் இருந்தது. தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எடுக்கப்பட்ட ஈசிஜியில் வேரியேஷன் காட்டுவதாக மருத்துவர்கள் சொல்லியுள்ளனர். அவர் துன்புறுத்தப்பட்டதற்கு இவைகள் எல்லாம் அடையாளமாக உள்ளது என்றார். மேலும், மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரை சொல்லி அழைத்தபோதும் அவர் சுயநினைவு இல்லாமல் இருந்தார் என்று கூறினார். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.என். நேரு, அமலாக்கத்துறை அதிகாரிகளின் அனுமதியோடு செந்தில் பாலாஜியை சந்தித்தாக கூறினார். செந்தில் பாலாஜியால் பேசமுடியவில்லை என்றும் அவரது உடல் நிலை மோசமாக இருக்கிறது, அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண் காணித்து வருகின்றனர் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்த அமைச்சர்கள் பலரும் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர்.

அமலாக்க துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அமைச்சர்கள், சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.