அரசு மருத்துவர் வீட்டில் கைவரிசை காட்டிய மர்மநபர்கள்.! 200 பவுன் நகை அபேஸ்...

அரசு மருத்துவர் வீட்டில் கைவரிசை காட்டிய மர்மநபர்கள்.! 200 பவுன் நகை அபேஸ்...


jewels theft in doctor's home

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் சஞ்சிநகரை சேர்ந்தவர் ஆசிக் அசன்முகமது என்பவர் முக்கண்ணாமலைப்பட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது சகோதரிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்தநிலையில்,  தனது சகோதரியை பார்ப்பதற்காக  ஆசிக் அசன்முகமது தனது குடும்பத்துடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆசிக் அசன்முகமதுவிற்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளனர் .

 இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிக் அசன்முகமது உடனடியாக வீட்டிற்கு வந்து உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 200 பவுன் நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

மேலும், வீட்டில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தையும் மர்மநபர்கள் எடுத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் மருத்துவர் வீட்டில் 200 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.