குடும்ப வறுமையால் விரக்தி: கூட்டாக தற்கொலை முயற்சி!, கணவன் பரிதாப சாவு, மனைவி கவலைக்கிடம்..!

குடும்ப வறுமையால் விரக்தி: கூட்டாக தற்கொலை முயற்சி!, கணவன் பரிதாப சாவு, மனைவி கவலைக்கிடம்..!


husband died tragically couple tried to commit suicide by drinking poison

குடும்ப வறுமை காரணமாக தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில், கணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள நவத்தாவு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்துமாரி. இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். இவர்கள் இருவரும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தங்கி அங்கே அன்றாடம் கிடைக்கும் வேலைகளை செய்து வந்தனர்.

இதற்கிடையில் மாரிமுத்து, முத்துமாரி இருவரும் குடி பழக்கத்திற்கு  அடிமையாகி உள்ளனர். இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் வறுமையில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இருவரும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். மேலும், குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை காரணமாக தம்பதியினர் இருவரும் மனமுடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த தம்பதியினர் நேற்று முன்தினம்  அவர்களது ஊரிலுள்ள கண்மாய் பகுதியில் மதுவில் எலி மருந்தை கலந்து குடித்துள்ளனர். இதன் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்மாயில் மயங்கிக்கிடந்தவர்களை, அங்கே வந்தவர்கள் மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். முத்துமாரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து, மானாமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.