சென்னையில் வெளுத்து வாங்கும் திடீர் மழை! பொது மக்கள் மகிழ்ச்சி!
தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருவதால், கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் வடமேற்கு திசையில் வீசும் கடல் காற்று காரணமாக சென்னையில் அடுத்த சில மணி நேரம் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் காலையில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலையில் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

சென்னை பட்டிணம்பாக்கம், அடையார், கிண்டி பள்ளிக்கரணை, ஆவடி , திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர், வளசரவாக்கம், போரூர், சைதாப்பேட்டை, மேடவாக்கம், செம்பாக்கம், பல்லாவரம், பம்மல், மீனம்பாக்கம், தியாகராயநகர், தாம்பரம், பெருங்களத்தூர். ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.