பெரும் சோகம்.. குடி பழக்கத்தால் பெற்றோரை இழந்து நிர்கதியாக நிற்கும் 3 குழந்தைகள்.!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கோழிக்கரை பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான ரகுநாதன். இவர் தனது மனைவி ராணி மற்றும் 3 குழந்தைகளுடன் கோழிக்கரையில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ரகுநாதன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று சொல்லப்படுகிறது. இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பவத்தன்று வழக்கம் போல் ரகுநாதன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ராணி மற்றும் ரகுநாதன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் ரகுநாதன் கோபத்தில் அங்கிருந்த கட்டையை எடுத்து தன் மனைவியின் தலையில் பலமாக அடித்ததில் ராணி துடிதுடித்து இறந்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத ரகுநாதன் அச்சமுற்று அதே அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்நிலையில் வீட்டின் ஒரே அறையில் தாய் ரத்தவெள்ளத்தில் கிடந்ததும் மேலும் தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததையும் பார்த்து ராணியின் மகள் அதிர்ச்சி அடைந்து அழுது கூச்சலிட்டுள்ளார். பின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கோத்தகிரி காவல் நிலையத்திற்கு இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைதொடர்ந்து அங்கு விரைந்து வந்த கோத்தகிரி காவல் துறையினர் ராணி மற்றும் ரகுநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குடி பழக்கத்தால் கணவன் மனைவி இறந்து மூன்று குழந்தைகளும் அனாதையான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.