அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து.. கல்லூரி மாணவர் பரிதாப உயிரிழப்பு.!

அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து.. கல்லூரி மாணவர் பரிதாப உயிரிழப்பு.!


government-bus-and-car-clash-head-to-head

திருக்கழுக்குன்றம் அருகே அரசு பேருந்து-கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் சந்திரசேகர், இவரது மகன் கபிலன் (22). இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கபிலன் இன்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து தனக்கு சொந்தமான காரில் கல்லூரிக்கு புறப்பட்டார்.

திருக்கழுகுன்றத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்த போது காலை சுமார் 7 மணியளவில் திருக்கழுக்குன்றத்தை அடுத்த கீரப்பாக்கம் என்ற இடத்தில் சென்னையில் இருந்து கல்பாக்கம் நோக்கி வந்த அரசு பஸ் காரின் மீது நேருக்குநேர் மோதியது. 

இந்த எதிர்பாராத விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காருக்குள் சிக்கிய கபிலன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்து குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருக்கழுக்குன்றம் காவல்துறையினர் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் கபிலனின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த கோரவிபத்து குறித்து திருக்கழுக்குன்றம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.