ஆறிபோன டீயால் வந்த விபரீதம்...!! திட்டிய மாமியார்; இரும்பு கம்பியால் அடித்த மருமகள்...!!

ஆறிபோன டீயால் வந்த விபரீதம்...!! திட்டிய மாமியார்; இரும்பு கம்பியால் அடித்த மருமகள்...!!



Disaster caused by dried tea... scolding mother-in-law; Daughter-in-law beaten with iron rod...

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் வேலு. இவரது மனைவி பழனியம்மாள் (75). இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகன் இருக்கின்றனர். 

மகன் சுப்பிரமணிக்கு திருமணமாகி மனைவி கனகு (42) மற்றும் ஒரு மகனுடன் அதே ஊரில் வசித்து வருகிறார். கணவர் வேலு இறந்து விட்டதால், பழனியம்மாள் தனது மகனுடன் தங்கியிருந்தார். 

விவசாய கூலி வேலை செய்யும் சுப்பிரமணி நேற்று இரவு வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் மனைவி, மகன், தாயுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். அதன் பிறகு அனைவரும் தூங்க சென்றனர். 

பழனியம்மாளுக்கு தலை வலித்ததால், தனது மருமகள் கனகுவிடம் சூடாக டீ போட்டு கொடுக்குமாறு கேட்டுள்ளார். தூக்ககலக்கத்தில் இருந்த கனகுவும் எழுந்து மாமியாருக்கு டீ போட்டு கொண்டு வந்து கொடுத்துள்ளார். டீ மிகவும் ஆறிப்போய் இருந்ததால், ஆத்திரமடைந்த பழனியம்மாள் மருமகளை திட்டியுள்ளார்.

தூக்கத்தில் டீ போட்டு கொடுத்ததற்கு நன்றி சொல்லாமல் திட்டுகிறீர்களே என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் கனகு. தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த கனகு அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மாமியாரை சரமரியாக தாக்கியுள்ளார். 

இந்த தாக்குதலில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் அடைந்த பழனியம்மாள் வலியால் கத்தி கூச்சலிட்டார். சத்தத்தை கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்த பழனியம்மாளின் மகன் சுப்பிரமணி மற்றும் அக்கம்பக்கத்தினர் வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பழனியம்மாளை விராலிமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த இலுப்பூர் காவல்துறையினர் பழனியம்மாளின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கனகுவை கைது செய்தனர். மருமகள், மாமியாரை அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.