திமுக பிரமுகரை சுட்டுக்கொல்ல பீகார் துப்பாக்கி: தேர்தல் முன்விரோதத்தில் பரபரப்பு பழிவாங்கும் நடவடிக்கை... கும்பல் கைது..!

திமுக பிரமுகரை சுட்டுக்கொல்ல பீகார் துப்பாக்கி: தேர்தல் முன்விரோதத்தில் பரபரப்பு பழிவாங்கும் நடவடிக்கை... கும்பல் கைது..!



Cuddalore Vridhachalam Gang Arrested by Cops Murder Attempt With Gun 

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம், இராமச்சந்திரன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். தியாகராஜனின் மகன் இளையராஜா (வயது 46). இவர் தி.மு.க-வில் சுற்றுப்புற சூழல் அணியின் கடலூர் மேற்கு மாவட்ட அமைப்பாளராக பொறுப்பில் இருக்கிறார்.

இவருக்கும், மணவாளநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மகன்கள் புகழேந்தி ராஜா (வயது 27), ஆடலரசு (வயது 25) ஆகியோருக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், சம்பவத்தன்று மணவாளநல்லூரில் இருக்கும் விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வர இளையராஜா காரில் தயாராக இருந்துள்ளார். அச்சமயம் அங்கு வந்த புகழேந்தி ராஜா, ஆடலரசு மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் இளையராஜாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

இந்த சம்பவத்தில் இளையராஜாவின் இடுப்பில் துப்பாக்கி குண்டு பாய, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். இதுகுறித்து இளையராஜா அளித்த புகாரின் பேரில் ஆடலரசு (வயது 25), புகழேந்தி ராஜா (வயது 27) உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.  

Cuddalore

இவர்களுக்கு துப்பாக்கி வாங்கித்தந்த சென்னையை சேர்ந்த அபுபக்கர் என்பவரின் மகன் முகமது யூனிஸ் (வயது 23) என்பவரும் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், நேற்று விருத்தாச்சலம் - சித்தலூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான 3 பேர் சாலையோரம் நின்றுகொண்டு இருந்தனர்.

அவர்களிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்த அன்பரசு (வயது 27), தஞ்சாவூர் மணலூரை சேர்ந்த செந்தில்குமார், புதுக்கோட்டை குண்டுகுளத்தை சேர்ந்த அழகேஸ்வரன் (வயது 24) என்பது தெரியவந்தது.

இவர்கள் வைத்திருந்த 5 துப்பாக்கி, 25 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த சோட்டா என்ற நபரிடம் இருந்து துப்பாக்கி, குண்டுகளை வாங்கி வந்துள்ளனர். இளையராஜா வழக்கில் இவர்களும் சம்பந்தப்பட்டு இருந்த நிலையில், சோட்டாவின் அறிவுறுத்தலின் பேரில் தலைமறைவாக இருந்து சிக்கியுள்ளனர். சோட்டாவை கைது செய்ய தனிப்படை பீகார் விரைந்துள்ளது.