அதிவேகத்தில் வந்த கார் மோதியதால் விபத்து: கணவன் மனைவி பரிதாப பலி 4 பேர் படுகாயம்..!

அதிவேகத்தில் வந்த கார் மோதியதால் விபத்து: கணவன் மனைவி பரிதாப பலி 4 பேர் படுகாயம்..!



couple tragically died when a car rammed into people waiting for a bus

பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்தனர் 4 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள விராலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (51). கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கல்யாணி (45). இந்த தம்பதியினருக்கு 4 மகள்கள் உள்ளனர். கணவன் - மனைவி இருவரும் கட்டிட தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர்.

இந்த நிலையில், வேலைக்கு செல்வதற்காக நேற்று காலை  செல்வமும், கல்யாணியும் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தனர். அப்போது, திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் ஒன்று சாலையோரம் நின்ற தம்பதியினர் மீது அதிவேகத்தில் மோதியது. இந்த விபத்தில் செல்வம் மற்றும் கல்யாணி தம்பதியினர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் இருந்த மதுரையை சேர்ந்த காசிநாதன், அவரது மனைவி சித்ரா, மகள் சரண்யா மற்றும் கார் டிரைவர்பொன்னையா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த விராலிமலை காவல்துறையினர், பலியான இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.