தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லை என்ற எண்ணம் யாருக்கும் வேண்டாம்.! மக்களே உஷார்.!
தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லை என்ற எண்ணம் யாருக்கும் வேண்டாம்.! மக்களே உஷார்.!
கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வந்தது.
இந்தநிலையில் பல மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள வீரர்கள் என சுமார் 3 கோடி பேருக்கு முதற்கட்டமாக இந்த தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பது குறித்து மத்திய குழு ஆய்வு செய்து வருகிறது. அந்தவகையில், சென்னை வந்த மத்திய குழுவினர் நேற்று ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள அத்திப்பட்டு கொரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து மத்திய குழுவினருக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் எடுத்துரைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கொரோனா தடுப்பூசியை பொருத்தவரை சுகாதாரப் பணியாளர்கள் 75 சதவீதம் பேர் போட்டுள்ளனர். அதேபோல் முன்கள பணியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து தடுப்பூசி போட்டு கொண்டு வருகின்றனர். முதியோர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் நல்ல வரவேற்பு உள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இதற்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தியத்தில், குடும்ப நிகழ்ச்சிகளில் அதிகளவில் கலந்து கொள்பவர்கள், முக கவசம் அணியாதவர்களிடையே தான் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பேருந்தில் பயணம் செய்பவர்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலர் முககவசம் அணிவதில்லை. கொரோனா தொற்று இல்லை என்ற எண்ணம் யாருக்கும் வேண்டாம் என தெரிவித்துள்ளார்.