பராமரிப்பு பணிகளால் மெதுவாக சென்ற எக்ஸ்பிரஸ் இரயில்.. உடல் துண்டாகி கல்லூரி மாணவர் பரிதாப பலி..! திருமங்கலத்தில் சோகம்.!!

பராமரிப்பு பணிகளால் மெதுவாக சென்ற எக்ஸ்பிரஸ் இரயில்.. உடல் துண்டாகி கல்லூரி மாணவர் பரிதாப பலி..! திருமங்கலத்தில் சோகம்.!!



College student death by train accident

ஓடும் இரயிலில் ஏறுவது, இறங்குவது தவறானது என கூறினால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கேட்காமல் செயல்படுவதன் விளைவு மாணவரின் உயிர் பறிபோன சோகம் திருமங்கலத்தில் நடந்துள்ளது. நிற்காத இரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகளால் மெதுவாக நகர்ந்த இரயிலும், அதன் சக்கரத்தில் சிக்கி பலியான மாணவருடைய பெற்றோரின் கண்ணீர் துயரத்தையும் விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம், பன்னீர்குண்டு கிராமத்தில் வசித்து வரும் மணிகண்டன் - பிச்சையம்மாள் தம்பதி மகன் சண்முகப்பிரியன். தம்பதிகளுக்கு இவர் மூன்றாவது மகன் ஆவார். சண்முகப்பிரியன் நாகர்கோவில் தனியார் கல்லூரியில் சுகாதார ஆய்வாளர் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

விடுமுறைக்காக ஊருக்கு வர முடிவெடுத்த சண்முகப்பிரியன், திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி நோக்கி பயணம் செய்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இரயிலில் நாகர்கோவிலில் இருந்து திருமங்கலத்திற்கு வருகை தந்துள்ளார். எக்ஸ்பிரஸ் இரயில்கள் பெரும்பாலும் திருமங்கலத்தில் நிற்காது. 

மதுரை

சிக்னல் காரணமாக அல்லது பராமரிப்பு பணிகள் காரணமாக எப்போதாவது நிறுத்தப்படலாம். தற்போது, திருமங்கலம் இரயில் நிலைய தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அவ்வழியே செல்லும் விரைவு இரயில்கள் திருமங்கலம் இரயில் நிலைய முதல் பிளாட்பாரம் வழியே குறைந்த வேகத்தில் செல்லும். 

இதனால் திருமங்கலத்தில் இறங்க நினைப்பவர்கள் மதுரை சென்று மீண்டும் பேருந்திலோ அல்லது பயணிகள் ரயிலிலோ மீண்டும் திருமங்கலம் வந்து சேரலாம். சிலர் ஓடும் இரயிலில் இருந்து இறங்குவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில், சண்முகப்பிரியன் பயணித்த அதிவிரைவு இரயிலும் குறைந்த வேகத்தில் திருமங்கலம் இரயில் நிலையத்தை கடந்தது. 

அப்போது, இரயிலில் இருந்து இறங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்ட சண்முகப்பிரியன், தண்டவாளத்திற்கும் - நடைமேடைக்கும் இடையே சிக்கி இரயில் சக்கரத்தில் அடிபட்டு உடல் துண்டாகி பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த இரயில்வே அதிகாரிகள், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.