கோவை கார் வெடிப்பு... ஐ என் ஏ சோதனையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!!
கோவை கார் வெடிப்பு... ஐ என் ஏ சோதனையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!!
கோவையில் கடந்த மாதம் 23-ஆம் தேதி உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கார் வெடித்து ஜமேஷா முபின் (29) பலியானார்.
இந்த கார் வெடிப்பு தொடர்பாக உக்கடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதை தொடர்ந்து குண்டுவெடிப்பில் பலியான முபின் வீட்டில் இருந்து வெடிபொருட்கள் தயாரிப்பதற்கான 75 கிலோ மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து முபினின் உறவினர்கள் முகமது அசாருதீன், அப்சர்கான் உள்ளிட்ட 6 பேரை சதி திட்டம் தீட்டியதாக காவல்துறையினர் கைது செய்தனர். கோவை மத்திய சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கு என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) விடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர் போன்ற 43 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதை தொடர்ந்து, இது தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோவை,சென்னை, திருவள்ளூர், நீலகிரி, திருப்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 43 இடங்களிலும், கேரளா மாநிலம் பாலக்காட்டில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டது. கோவையில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு காரில் வெடிகுண்டு வெடித்து ஜமேஷா முபின் பலியானது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டது.
என்.ஐ.ஏ நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஜமேஷா முபின் பயங்கரவாத உறுதிமொழி எடுத்த பின்னர் தற்கொலை தாக்குதலை நடத்தி, சேதம் விளைவிக்க வேண்டும் என்றும், பயங்கரவாத நோக்கத்தில் செயல்பட்டுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் நேற்று நடத்தப்பட்ட சோதனையயில் செல்போன், லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்கள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. என என்.ஐ.ஏ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.