கியாஸ் கசிவு தெரியாமல் அடுப்பை பற்றவைத்து சோகம்.. கணவன் - மனைவி பரிதாப பலி.!

கியாஸ் கசிவு தெரியாமல் அடுப்பை பற்றவைத்து சோகம்.. கணவன் - மனைவி பரிதாப பலி.!



chennai-west-mogappair-husband-wife-died-gas-leakage-fi

சென்னையில் உள்ள மேற்கு முகப்பேர், கார்டன் அவென்யூவில் வசித்து வருபவர் அகமது ஷெரிப் (வயது 60). இவர் ஆட்டிடராக இருந்து வருகிறார். இவரின் மனைவி நாக முனிஷா (வயது 59). இந்நிலையில், கடந்த 6 ஆம் தேதி பால் காய்ச்சுவதற்காக நாக முனிஷா கியாஸ் அடுப்பை பற்றவைத்துள்ளார். 

அப்போது, ஏற்கனவே சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு, வீடு முழுவதும் வாயு பரவி இருந்த நிலையில், அடுப்பை பற்றவைத்த காரணத்தால் வீடு முழுவதும் தீப்பிடித்துள்ளது. மேலும், வெடி விபத்து போல பலத்த சத்தத்துடன் தீப்பற்றி இருந்துள்ளது. 

இதனால் வீடு முழுவதும் தீயில் கருகிய நிலையில், நாக முனிஷா மற்றும் ஹாலில் இருந்த அகமது ஷெரிப் ஆகியோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். குளியலறையில் இருந்த அகமது ஷெரீப்பின் தங்கை மலிதா லேசான காயத்துடன் உயிர்பிழைத்தார். 

chennai

அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், தீயை அணைத்து அகமது ஷெரிப் மற்றும் நாக முனிஷாவை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். 

அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் நாக முனிஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து, நேற்று மதியம் அகமது ஷெரீப்பும் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விஷயம் தொடர்பாக முகப்பேர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.