7 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை; 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை எப்படி?.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

7 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை; 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை எப்படி?.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



Chennai IMD Announce Rain Next 7 Days 

 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "24ஆம் தேதியான நேற்று மாலை, வடக்கு ஆந்திரா - தெற்கு ஒரிசா கடலோரப் பகுதியை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 25 ஆம் தேதியான இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி வருகிறது. 

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 25 ஆம் தேதி இன்று தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டத்தின் மலை பகுதிகள், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

chennai

26 ஆம் தேதியை பொறுத்தமட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 27ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். மீனவர்களுக்கான எச்சரிக்கையாக, இன்று மற்றும் நாளை வங்கக்கடல் பகுதியில் உள்ள தமிழக கடலோர பகுதி, 

chennai

மன்னார் வளைகுடா, அதனை ஒட்டியுள்ள கடல் பகுதி, ஆந்திர கடலோரப்பகுதி, அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், இலங்கை கடலோர பகுதி, அதனை ஒட்டிய தென்மேற்கு-தென்கிழக்கு வங்க கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல, அரபிக்கடலைப் பொறுத்தமட்டில் லட்சத்தீவு பகுதி, வடக்கு கேரளா-கர்நாடக கடலோர பகுதி, அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு சுமார் 40 கிலோமீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 

நேற்று ஒரே நாளில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 38 சென்டிமீட்டர் மழையும், கோயம்புத்தூர் மாவட்டம் சின்ன கல்லாறு பகுதியில் 12 சென்டிமீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் மேல் பவானியில் 11 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.