முதியவர்களை குறிவைத்து ஏ.டி.எம் மோசடி: போலி கார்டுகளுடன் சிக்கிய பலே கில்லாடி..!

முதியவர்களை குறிவைத்து ஏ.டி.எம் மோசடி: போலி கார்டுகளுடன் சிக்கிய பலே கில்லாடி..!



atm-fraud-targets-senior-citizens

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள சமுட்டிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (60). இவர் நெய்வேலியில் இயங்கிவரும் என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கம்-2 சொசைட்டியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை பணம் எடுப்பதற்காக மந்தாரக்குப்பம் கங்கைகொண்டான் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்றுள்ளார். அவருக்கு ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க தெரியாததால், அங்கு நின்று கொண்டிருந்த வாலிபரிடம் தனது கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கேட்டுள்ளார்.

இதன் பின்னர் ஏ.டி.எம் கார்டை பெற்றுக் கொண்ட அந்த வாலிபர் ஏ.டி.எம் எந்திரத்தில் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயற்சி செய்வது போல பாவனை செய்ததுடன் போலியான ஏ.டி.எம் கார்டு ஒன்றை நடராஜனிடம் கொடுத்துள்ளார். கார்டை வாங்கி பார்த்த நடராஜன் அதில் தனது பெயர் இல்லாததால் சந்தேகமடைந்து  வாலிபரிடம் அது குறித்து கேட்டுள்ளார். இதனையடுத்து சுதாரித்த அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை விரட்டி பிடித்த நடராஜன், மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதனையடுத்து அவரிடம் காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் பகுதியை சேர்ந்த குணசேகர் என்பவரது மகன் வினோத்குமார்(30) என்பதும், ஏ.டி.எம் மையத்துக்கு பணம் எடுக்க வரும் முதியவர்களை குறிவைத்து அவர்களுக்கு பணம் எடுத்து தர உதவி செய்வதுபோல் நடித்து போலி ஏ.டி.எம். கார்டுகளை மாற்றிக் கொடுத்து பணத்தை அபேஸ் செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து வினோத்குமாரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்து 13 போலி ஏ.டி.எம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.