எடப்பாடி பழனிசாமி உருவப்படம் எரிப்பு!!.. பா.ஜனதா கட்சியினரை கண்டித்து அ.தி.மு.க போராட்டம்..!

எடப்பாடி பழனிசாமி உருவப்படம் எரிப்பு!!.. பா.ஜனதா கட்சியினரை கண்டித்து அ.தி.மு.க போராட்டம்..!



ADMK protests against Edappadi Palaniswami effigy burning

எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த பா.ஜனதா கட்சியினரை கண்டித்து அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பா.ஜனதா நிர்வாகிகளின் இந்த நடவடிக்கையை கண்டித்து கோவில்பட்டி அ.தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் பா.ஜனதா நிர்வாகிகள் மீது கோவில்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.

முன்னதாக பா.ஜனதா தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பதவி வகித்த சி.டி.ஆர்.நிர்மல்குமார் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தார். அதற்கு மறு நாளே பா.ஜ.க மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலிப் கண்ணன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

இதனை தொடர்ந்து பா.ஜனதா கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்து வரும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது இவ்விரு கட்சியினரிடையே சலசலப்பையும் உண்டாக்கியது.

இந்த நிலையில், பா.ஜனதா கட்சியினர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை தீ வைத்து எரித்த சம்பவமும் இதற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்திய சம்பவமும் தூத்துக்குடி சுற்று வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.