2 குழந்தைகளின் தாய் தீக்குளிப்பு: காரணம் தெரியாமல் தவிக்கும் போலீசார்..!

2 குழந்தைகளின் தாய் தீக்குளிப்பு: காரணம் தெரியாமல் தவிக்கும் போலீசார்..!


a-mentally-ill-woman-tried-to-put-out-a-fire-by-pouring

பரங்கிப்பேட்டை அருகே மன நலம் பாதிக்கப்பட்ட பெண் பெட்ரோல் ஊற்றி தீ குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம்  பரங்கிப்பேட்டை அருகேயுள்ள பெரியகுமட்டி என்கிற கிராமத்தை சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது மனைவி பானுப்பிரியா (32). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.  இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சம்பத்குமார் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த பானுப்பிரியா திடீரென கேனில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர்  தீயின்  வெப்பம் தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டுள்ளார்.

அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், பானுப்பிரியாவின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்துள்ளனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு பானுப்பிரியாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை காவல் ஆய்வாளர் பாஸ்கர், உதவி ஆய்வாளர் சிவராமன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் பானுப்பிரியா சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் இதன் காரணமாக அவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்துள்ளது.

இருப்பினும்  அவரது தற்கொலை முயற்சிக்கு மன நல பாதிப்பு மட்டும்தான் காரணமா அல்லது  வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.