மக்களே உஷார்! ஆட்டத்தை ஆரம்பித்த டெங்கு காய்ச்சல்; இரட்டை குழந்தைகள் பரிதாப பலி!

மக்களே உஷார்! ஆட்டத்தை ஆரம்பித்த டெங்கு காய்ச்சல்; இரட்டை குழந்தைகள் பரிதாப பலி!



2 children dead for dengu fever

மழைக்காலம் எப்பொழுது வரும் தண்ணீர் பஞ்சம் எப்பொழுது தீரும் என அனைவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் மழை காலம் வந்தால் கொசுக்களின் ஆட்டமும் அதிகமாகி விடுகிறது. இதனால் பலவிதமான காய்ச்சல்களும் நோய்களும் நம்மை தொற்றிக் கொள்கின்றன. இதில் மிகவும் கொடுமையானது டெங்கு காய்ச்சல்.

சென்னை மாதவரத்தில் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த இரட்டை குழந்தைகள் தட்சன் மற்றும் தீக்சா ஆகியோர் பலியாகியுள்ளனர். மாதவரம் பொன்னியம்மன் மேடு தெருவைச் சேர்ந்த சந்தோஷ் குமார், கஜலட்சுமி தம்பதியரின் இரட்டை குழந்தைகள் தான் அவர்கள் இருவரும். 7 வயது நிரம்பிய தட்சன் மற்றும் தீக்சா இருவரும் தனியார் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.

2 children dead for dengu fever

சில நாட்களுக்கு முன்பு இரண்டு குழந்தைகளும் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு உள்ளனர். எனவே கடந்த 20ஆம் தேதி கொளத்தூர் மாநகராட்சி மருத்துவமனையில் குழந்தைகளை அனுமதித்தனர் பெற்றோர். அங்கு அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ரத்தப் பரிசோதனையில் இருவருக்குமே டெங்கு காய்ச்சல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவர்களது காய்ச்சல் தீவிரமடைந்ததால் குழந்தைகள் இருவரையும் சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தனிப் பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தைகள் இருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர்.

இரட்டை குழந்தைகள் இருவரையும் ஒரே நேரத்தில் இழந்த பெற்றோர்கள் கதறி துடித்தனர். குழந்தைகளின் தந்தை சந்தோஷ் குமார் வடக்கு மாவட்ட திமுக மாணவரணி துணை செயலாளர் ஆவார். குழந்தைகளின் உடலுக்கு மாதவரம் தொகுதி திமுக எம்எல்ஏ சுதர்சனம் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இதுகுறித்து சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனர் டாக்டர் அரசர் சீராளர் கூறுகையில், “உயிரிழந்த 2 குழந்தைகளும் அபாய அறிகுறிகளுடன் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாமதமாகவும், அபாயகரமான நிலையிலும் அனுமதிக்கப்பட்டதால் தீவிர மருத்துவ சிகிச்சைகள் கொடுக்கப்பட்டும், குழந்தைகளின் உடல் அதனை ஏற்கவில்லை. அதனாலேயே மருத்துவர் குழு எவ்வளவோ போராடியும் குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். 

2 children dead for dengu fever

தற்போது மருத்துவமனையில் 27 குழந்தைகள் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 6 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது” என்றார்.

இந்த குழந்தைகள் தாமதமாகப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாலே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே யாரேனும் காய்ச்சலால் அவதிப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்:
`காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிற்று வலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, எலும்பு வலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும்.