இன்று சுக்கிரவார பிரதோஷம்... கடன் பிரச்சனைகள் தீர சிவபெருமானை வழிபடுங்கள்...!!

இன்று சுக்கிரவார பிரதோஷம்... கடன் பிரச்சனைகள் தீர சிவபெருமானை வழிபடுங்கள்...!!


today-sukira-vara-pradhosham

சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் வெள்ளிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானதாகும். பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபடுவதன் மூலம் தோஷங்கள் அகன்றுவிடும்.

வெள்ளிக்கிழமை சுக்கிரவார தினத்தில் வரும் பிரதோஷத்தில் நந்திதேவருக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்றைய தினம் 16 வகையான பொருட்களால் நந்திதேவருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். நந்தி மற்றும் சிவபெருமானுக்கு அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுத்து கடன் தொல்லையில் இருந்து விடுபடுங்கள்.

நாளைய தினம் வெள்ளிக்கிழமை மே 13ஆம் தேதி பிரதோஷ தினமாகும். இந்த நாளில் சிவ தரிசனம் செய்தால் கடன் பிரச்சனைகள் தீரும். நிதி நெருக்கடி நீங்கி செல்வ வளம் பெருகும். பிரதோஷ நேரத்தில் ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும், சிவப்பு அரிசி, நெய்விளக்கு வைத்தும் வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.

பிரதோஷ நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும். நந்திதேவரது தீபாராதனைக்கு பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.

சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்தது, வெள்ளிக்கிழமை. இந்த நாளில் வரும் பிரதோஷத்தில் வழிபாடு செய்யும் ரிஷபம், துலாம் ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும், சுக்ர திசாபுத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக தோஷம் நீங்கும்.

பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் அளிக்கும்.

சாதாரண நாளில் சிவன் கோயிலில் வலம் வருவதைப் போல் இல்லாமல், பிரதோஷ நேரத்தில் சற்று வேறு விதமாக வலம் வருதல் வேண்டும். அதற்கு சோமசூக்தப் பிரதட்சணம் என்று பெயர்.

அதாவது நந்தியை வணங்கி சிவனுக்கு அபிஷேகம் செய்யும் நீர் வரும் கோமுகி வரை சென்று அங்கு நின்று வணங்கி, பின்னர் அதே வழியாக வலம் வந்து சண்டிகேஸ்வரர் வரை வந்து அவரை வணக்கி மீண்டும் கோமுகிக்குச் செல்ல வேண்டும். இப்படி மூன்று முறை வணங்க வேண்டும். இந்த பிரதட்சண முறைக்கு சோமசூக்தப் பிரதட்சணம் என்று பெயர்.