தோற்று தொலைத்த இந்தியா..!! தொடரையும் இழந்து நம்பர்-1 இடத்தையும் பறிகொடுத்த சோகம்..!!

தோற்று தொலைத்த இந்தியா..!! தொடரையும் இழந்து நம்பர்-1 இடத்தையும் பறிகொடுத்த சோகம்..!!


india-lost-the-last-odi-against-australia-by-21-runs-an

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததுடன் தொடரையும் இழந்தது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த 17 ஆம் தேதி தொடங்கியது.

மும்பையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2 வது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இந்திய அணியை பந்துவீசுமாறு கேட்டுகொண்டார். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஷ்-டிராவிஸ் ஹெட் ஜோடி தொடக்கம் அளித்தது. தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் டிராவிஸ் ஹெட் 33 ரன் சேர்த்திருந்த போது ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்மித் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளிக்க, டேவிட் வார்னர் மிட்செல் மாட்ஷ் உடன் இணைந்தார்.

நிதானமான ஆடிய மிட்செல் மார்ஷ் 47 ரன்னிலும், டேவிட் வார்னர் 23 ரன்களிலும் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய லபுஷேன் 28, அலெக்ஸ் கேரி 38, மார்கஸ் ஸ்டாய்னிஸ் 25 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். 49 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா தலா 3 விக்கெட்டுகளைம், அக்ஸர் பட்டேல், முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளைம் கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய அணிக்கு 270 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 270 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, ரோஹித் சர்மா-சுப்மன் கில் ஜோடி தொடக்கம் அளித்தது. அதிரடியாக பேட்டிங் செய்த ரோஹித் சர்மா 17 பந்துகளில் 30 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து விராட் கோலி சுப்மன் கில்லுடன் இணைந்தார்.

ஆஸ்திரேலிய அணியினரின் நேர்த்தியான பந்துவீச்சில் ரன் சேர்க்க சிரமப்பட்ட இந்திய வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். சுப்மன் கில் 37, விராட் கோலி 54, பாண்டியா 40, சூர்ய குமார் யாதவ் 0 ஆட்டமிழக்க ரசிகர்களின் நம்பிக்கையும் தகர்ந்தது. இந்த தொடரில் நடந்த மூன்று போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் தான் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக்-அவுட்டில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

49.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்த வெற்றியின் மூலம் ஐ.சி.சி ஓருநாள் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடித்தது.