குவாலிபையர் 1: ப்ளே-ஆப் சுற்றில் அடுத்தது நடக்கப் போவது என்ன..?!!

குவாலிபையர் 1: ப்ளே-ஆப் சுற்றில் அடுத்தது நடக்கப் போவது என்ன..?!!



gujarat-titans-chennai-super-kings-will-face-each-other

ஐ.பி.எல் ப்ளே-ஆப் சுற்றில் நாளை நடைபெறும் குவாலிபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், லீக் போட்டிகள் அனைத்தும் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில் நாளை ப்ளே-ஆப் சுற்று தொடங்க உள்ளது.

மொத்தம் 20 புள்ளிகளுடன் குஜராத் அணி முதலிடத்தில் நீடிக்கிறது. கடைசி லீக் போட்டியில் டெல்லியை துவம்சம் செய்த சென்னை 2 இடத்தை தக்கவைத்துக் கொண்டது. லக்னோ 3 இடத்திலும், கடைசி லீக் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்திய மும்பை 16 புள்ளிகள் பெற்று இறுதியாக தகுதி பெற்றது. மற்ற அணிகள் அனைத்தும் லீக் சுற்றுடன் போட்டியில் இருந்து வெளியேறின.

ப்ளே-ஆப் சுற்றில் 3 போட்டிகள் நடைபெறும், முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் குவாலிபையர் என்கிற தகுதி சுற்று போட்டியில் பங்கேற்கும். அடுத்த 2 இடங்களை பிடித்த அணிகள் எலிமினேட்டர் என்கிற வெளியேற்றுதல் சுற்றில் மோதும். அடுத்த போட்டியில் குவாலிபையர் சுற்றில் தோல்வியடைந்த அணியும், எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணியும் போட்டியிடும். முதல் போட்டியிலும், மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும்.

இந்த நிலையில், நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள தகுதி சுற்று போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டி சென்னையில் நடைபெறுவதால் மைதானம் முழுக்க மஞ்சள் படை நிறைந்திருக்கும் என்றும் சென்னை ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை நடைபெறும் குவாலிபையர் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும். ஒருவேளை தோல்வியடையும் பட்சத்தில், எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் அடுத்த போட்டியில் பங்கேற்கும். ப்ளே-ஆப் சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப் போட்டிக்கு தகுதிபெற 2 வாய்ப்புகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எலிமினேட்டர் சுற்றில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்த உள்ளது. இந்த போட்டியில் தோல்வியடையும் அணி போட்டியை விட்டு வெளியேறும். வெற்றி பெறும் அணி 2 வது தகுதி சுற்று போட்டியில் பங்கேற்க்கும்.

குஜராத் மற்றும் சென்னை அணிகள் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதியதில் 3 போட்டிகளிலும் குஜராத் அணியே வெற்றி பெற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் அதிகபட்சமாக குஜராத் அணி 182 ரன்களும், சென்னை அணி 178 ரன்களும் குவித்துள்ளன.