ஆல் ஈஸ் வெல், மீண்டும் தொடங்குவோம்: CSK ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஜடேஜா..!

ஆல் ஈஸ் வெல், மீண்டும் தொடங்குவோம்: CSK ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஜடேஜா..!



All is well, let's start again Jadeja makes CSK fans happy

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற எட்டாவது டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் ஐ.பி.எல் தொடருக்கான மினி ஏலத்தின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த மினி ஏலம் நடைபெறவுள்ளது.

இந்த மினி ஏலத்திற்கு முன்பாக ஐ.பி.எல் தொடரில் பங்குபெறும் அனைத்து அணிகளும் தங்கள் அணிக்காக தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட நேற்று ( நவம்பர் 15) கடைசி நாளாகும். இதன் காரணமாக அனைத்து அணிகளும் தங்கள் அணிக்காக தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. சி.எஸ்.கே அணியும் தங்கள் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட  வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

சி.எஸ்.கே அணியின் கேப்டனாக எம்.எஸ்.டோனி தொடர்கிறார். மேலும் அந்த அணியில் நீண்ட காலமாக விளையாடி வந்த ஆல்-ரவுண்டர் ஜடேஜா மீண்டும் தக்கவைக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அணி அதிரடி ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோவை விடுவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை அணியால் தக்கவைக்கப்பட்டதை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு சி.எஸ்.கே ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. அந்த பதிவில், சி.எஸ்.கே கேப்டன் தோனியை வணங்குவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஜடேஜா, "அனைத்தும் நலமாக உள்ளது, மீண்டும் தொடங்குவோம்" என்று பதிவிட்டுள்ளார்.